சுவாரஸ்யமான விஷயம்!

எனக்கு சுவாரஸ்யமாக பட்ட சில விஷயங்கள் இங்கே, உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையில்...

Tuesday, November 15, 2005

 

அந்த மின்னல் யோசனை என்னவாக இருக்கும்?

சென்ற மாதத்தில் அலுவலக பணி நேர மாற்றங்களினால் அதிகமான அளவு மாலை நேர ஓய்வு கிடைத்தது. அதன் காரணமாக, பயனுள்ள சில ஆன்மீகச் சொற்பொழிவுகளுக்கு செல்லும் வாய்ப்பும் அதிகமாக கிடைத்தது. சாதாரணமாகவே இது போன்ற உற்சாகமூட்டும் நல்ல சொற்பொழிவுகளைக் கேட்கும்போது மனதில் உள்ள அழுத்தங்கள் பறந்து போய் புத்துணர்ச்சி கிடைக்கும், கிட்டத்தட்ட ஒரு பேட்டரியை ரீ- சார்ஜ் செய்தது போன்று.

அப்படி ஒரு சொற்பொழிவில் கேட்ட ஒரு கதை:

முன்னொரு காலத்தில் பலசாலியான ஒரு மரவெட்டி இருந்தான். அவன் பிழைப்புக்காக மர வியாபாரி ஒருவரிடம் வேலைக்குச் சேர்ந்தான்.

அவன் கேட்ட சம்பளம் கிடைத்துவிட்டதில் மரவெட்டிக்கு ஒரே சந்தோஷம்.

மர வியாபாரி கோடாரியைக் கையில் கொடுத்து வெட்ட வேண்டிய மரங்களைக் காட்டினார். உற்சாகமாக வேலையை ஆரம்பித்த மரவெட்டி, முதல் நாள் 18 மரங்களை வெட்டிச் சாய்த்தான்.

முதலாளி மிகவும் மனம் மகிழ்ந்து போய் பாராட்டினார்.

முதலாளியின் வார்த்தைகளில் மேலும் உற்சாகமடைந்த மரவெட்டி சுறுசுறுப்புடன் மறுநாள் வேலைக்குப் புறப்பட்டான். ஆனால், கடுமையாக உழைத்தும் 15 மரங்களுக்கு மேல் அவனால் வெட்ட முடியவில்லை.

மூன்றாம் நாளோ நிலமை இன்னும் மோசம். மிகவும் முயற்சித்தும் முடியாமல் 10 மரங்களோடு ஓய்ந்து போனான். இப்படி ஒவ்வொரு நாளும் வெட்டும் மரங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது.

"எனது சக்தியை இழந்து விட்டேன்" என மனதில் எண்ணிச் சோர்ந்துபோன அவன் முதலாளியிடம் சென்று "என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை...நான் எவ்வளவு முயற்சித்தும் தோல்வியே மிஞ்சுகிறது" என புலம்பினான்.

உனது கோடரியை கடைசியாக எப்போது நீ தீட்டினாய்? என்று முதலாளி கேட்ட கேள்வியின் ஆழத்தை அப்போதுதான் உணர்ந்தவனாக அதிர்ந்து போய், ”தீட்டுவதா? அதற்கான நேரம் எனக்கு கிடைக்கவில்லை. எனது சிந்தனை முழுவதும் நிறைய மரங்கள் வெட்ட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தது.” என்றானாம்.

நம் வாழ்க்கையோடு இதனை ஒப்பிட்டுப் பாருங்கள். ஒரு நாளின் 24 மணி நேரம் என்பது எனக்குப் போதவில்லை என்று கூறுவது ஒருவரின் சாதாரண வாக்கியமாகிவிட்டது. இயந்திரகதியில் எந்நேரமும் வேலை வேலை என்று அர்ப்பணித்து விட்டு புத்தி எனும் கோடாரியை தீட்ட மறந்து விடுகிறோம்.

ஏன் இப்படி? புத்தியை எப்படி தீட்டுவது என்பதை நாம் மறந்ததினால் கூட இருக்கலாம். நம்முடைய செயல்களில் தவறில்லை. ஆனால் சிந்திக்க என்று நேரம் ஒதுக்குவதில்லை. சுயநலங்கள் பெருகிவிட்ட வாழ்க்கையில், நம்மைச்சுற்றி என்ன நடக்கிறது என்று நாம் சிந்திப்பதில்லை.

"இன்றைய நவீன உலகத்தில் முன்பை விட எல்லோரும் சுறுசுறுப்பாக இருக்கிறோம் என்பது உண்மை. ஆனால் முன்பை விட சந்தோஷத்தில் குறைந்து இருக்கிறோம் என்பதும் கசப்பான உண்மை... " என்று பேசிக்கொண்டே போனார். என் மனம் ஏனோ அந்த வரிகளில் பிரேக் போட்டு நின்றுவிட்டது. கிட்டத்தட்ட கூட்டம் முடியும் தருவாயில் நாம் அடிக்கடி இழந்து போகும் Presence of Mind பற்றி அவர் சொன்ன ஒரு குட்டிக்கதையின் போதுதான் நினைவிலிருந்து மீண்டேன்.

புகழ் பெற்ற சிந்தனையாளர் ஒருவர், ஒருமுறை தனது கூட்டத்தை முடித்துக்கொண்டு நண்பர்களுடன் திரும்பி வரும் வழியில் கார் மக்கர் செய்தது. காரின் வலது பின் சக்கரத்தில் ஏதோ சத்தம் வருகிறதே என்று நிறுத்திப்பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சி! விஷயம் கொஞ்சம் சீரியஸ்தான். கார் பின் வீல் உடைய நட்டுகள் எங்கோ எல்லாமே கழண்டு விழுந்துவிட்டிருக்கின்றன. சக்கரம் மட்டும் தேமே என்று நிற்கிறது. டிரைவரோ தொழிலுக்குப்புதுசு. வண்டி எடுக்கும் போது சரியாக கவனிக்கவில்லை. நேரமோ பின்னிரவு. இனி ஒரு அடி கூட நகர்த்த முடியாது என்கிற நிலை. இருக்கிற வீல் எப்போது கழண்டு ஓடும் என்று தெரியாது. ஸ்டெப்னி இத்யாதிகள் வைத்து என்ன பயன்? ஒருத்தரை ஒருத்தர் நொந்து கொண்டு அமர்ந்து விட்டார்கள்.

கொஞ்ச தூரத்தில் தெரிந்த வெளிச்சத்தைக்கண்டு சென்றபோது வந்த குடிசை வீடு ஒன்றில் வாசலில் பாமரன் ஒருவன் அமர்ந்திருந்தான். விஷயத்தை கேள்விப்பட்டு "ப்பூ.. இவ்ளோதானா விஷயம்?" என்றதுடன் அவன் நொடிப்பொழுதில் கொடுத்த ஆலோசனையை செயல்படுத்தியதில், எந்தவித சிக்கலும் இல்லாமல் காரை மீண்டும் எடுத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டனர்.

சிந்தனாசக்தியை மேம்படுத்துவது பற்றி ஊருக்கெல்லாம் உபதேசம் செய்யும் அந்த சொற்பொழிவாளருக்குக்கூட உதிக்காத அந்த மின்னல் யோசனை என்னவாக இருக்கும்?